இஸ்லாமியக் கவிதைகள் தெரிவுக்கான தொகுப்பு
தேங்காப்பட்டணம்
Posted in இஸ்லாமியக் கவிதைகள் on ஜனவரி 18, 2008 by abdulqaiyum(14-10-2007 அன்று பஹ்ரைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியின் போது யான் வாசித்தளித்த கவிதை)
ஒரு
மீனவக் குப்பத்தை
வானாளாவ உயர்த்திவைத்த
தீனோர்களுக்கு என் ஸலாம்
சாதிக்கென சங்கங்கள்
வீதிக்கொன் றிருக்கையிலே
ஆதியிலே அராபியரை
ஆரத் தழுவியதோர்
வேதமுறு மார்க்கமதாம்
சோதிமிகு இஸ்லாத்தை
ஆதியிலே – பாரத
மேதினியில் பரப்புதற்கு
காரணமாய் திகழ்ந்த
கடல் சூழ்ந்த இவ்வூர்க்கு
சங்கைமிகு இச்சங்கம்
சாலப் பொருத்தம்
என் ஆசான்
அப்துல் கபூர் அவர்களின்
உள்ளங்கவர் ஊர்
உங்கள் ஊர்
அந்த சந்தக்கவியை
நினைக்கையில் எல்லாம்
என் சிந்தையில் வந்து வந்து
இந்த ஊர் நிழலாடும்
வெள்ளித்திரை
வெற்றிகளுக்கே
வெற்றி விழா காணும்
வியாபார உலகில்
பழமை மிகு
பள்ளிக்கு பேர்போன
நல்லூரின் அமைப்புக்கு
இன்று வெள்ளி விழா !
மனந் துள்ளும் விழா!
தென்னைக்குள்
ஒளிந்திருக்கும்
இளநீருச் சுவைப்போல
தேங்கைக்கு
பல்வேறு
சுவைகள் உண்டு
இலக்கியத்தில்
இவர் பங்கு
ஏராளம் ஏராளம் !
இதற்கு
இன்பத்தமிழ் ஒன்றே
சான்றுரைக்கும் !
எண்ணற்ற அறிஞர்களை
ஈன்றெடுத்த பெருமைகள்
இவ்வூர்க்குண்டு !
பாலகவி
பக்கீர் சாகிப்
பாடிவைத்த
பாடல்களோ
பல நூறு .. ..
காலத்தால் அழியாத
காப்பியங்கள் வரலாறு.
குஞ்சுமூசா புலவரது
வாழ்த்து மாலை .. ..
குறையாத இன்பம் தரும்
இன்றும் நாளை.
திருமலர் மீரான் முதல்
தேங்கை சர்புத்தீன் வரை
தீந்தமிழுக் காற்றியதோர்
மாபெரும் பங்கு.
மாலிக் இப்னு தீனாரின்
மகிமையினை பறைசாற்றும்
மாண்புகளை கூறிடவா?
‘அந்த அரபிக்கடலோரம்
உன் அழகைக் கண்டேனே !’ –என
அமுத கீதம் பாடிடவா?
‘நிங்கள்’ கேரளத்து நேசம்
உங்கள் பேச்சிலுண்டு வாசம்
தமிழுக்கு நீங்கள்
வார்த்த வார்த்தைகள்
வாசித்திட இயலாது ..!
கொசுவுக்கு ஒலுங்கென்று
சொல்லுவது
உங்களூரில் மட்டும்தான் !
- தேங்கா பட்டணம்
- தென்னை பட்டணம்
- தென் பட்டினம்
- தெற்கைபட்டினம்
- தர்ம பட்டணம்
- தேங்கை
- தேங்கையூர்
- குழந்தை நகர்
இவையாவும்
இவ்வூரின்
அழகுத் திருநாமங்கள்
- வண்டமிழ்
- தண்டமிழ்
- தீந்தமிழ்
- பைந்தமிழ்
- செந்தமிழ்
- இயற்றமிழ்
- இன்பத்தமிழ்
- முத்தமிழ்
- காவியத்தமிழ்
என்று விளங்கும்
எந்தமிழுக்கு
அடுத்தபடி ..
இத்தனை திருநாமங்கள்
இவ்வூருக்கு மட்டும்தான் !
வல்லிய பள்ளி .. .. ..!
விசாலம்
உங்கள் பள்ளியின்
பெயரில் மட்டுமல்ல
உங்கள்
மனதிலும்தான்.
இல்லாத குமர்களுக்கு
இல்வாழ்க்கை வகுப்பதுவும்;
கல்விக்கண் திறப்பதுவும்;
கரமுதவி நீட்டுவதும்;
மார்க்கப் பணிகளுக்கு
மனமுவந்து அளிப்பதுவும்;
பட்டியலிட்டாலும்
படித்து மாளாது.
நற்பணிகள் தொடரட்டும்;
நாயனவன் அருள்மழைகள்
நாள்தோறும் பொழியட்டும்.
அன்புடன்
அப்துல் கையூம்
பாங்கு சப்தம்
Posted in இஸ்லாமியக் கவிதைகள் on ஜனவரி 18, 2008 by abdulqaiyumவிசாலமற்ற மண்ணறையே
விலாசங்களாக மாற
மக்கிப்போன ஆடைகளினூடே
மரத்துப்போன என் தேகம்.
புழுக்களின் பிரவேசத்தில்
புழுக்கங்களின் பிரதேசத்தில்
புற்றாகிப்போன வெற்றுடல்.
ஊர்வனங்களின் ஊர்வலத்தில்
ஊர்வலமாய் வந்த நான்
கூறுகளாகி குதறியபிண்டமாய்
குரூரத்தின் சிதறலில்
உதிரங்கள் உறைந்து
உதிர்ந்தொழுகும் சடலமாகி
புரண்டுபடுக்கவும் நாதியற்று
அழுகும் நாற்றங்களில்
அசுத்தங்களே சுவாசங்களாக
பூச்சியின் கடைவாயில்
என் சின்னச் சின்ன
சதைத் துண்டுகள்.
நீட்டவும் மடக்கவும்
ஆட்டவே முடியாமல்
அசைவற்றுப் போன
நீர்த்துப்போன காற்றுப்பை.
கறையான்களுக் கிரையாகி
மேனியாவும் தீனியாக
கரைந்துருகும் மாமிசம்.
மயான பூமியில்
மணலரிப்புகளுக்கு ஏனோ
அவகாசமே இல்லாத
தலைபோகும் அவசரங்கள்.
இடைவெளி குறைந்து
எலும்புகள் நொறுங்க
துர்மணத்தின் வீச்சத்தில்
செத்த உடல்மீது
தத்தம் பணிகளை
நித்தம் புரியும்
சிற்றுயிர்கள்
சற்றே தளர்த்த
என்ன காரணமென
அண்ணாந்து நோக்க
ஆகாயத்தில் ஒலித்தது
“அல்லாஹு அக்பர்” என்ற
அழைப்புச் சப்தம்.
– அப்துல் கையூம்
ஆட்டம்
Posted in இஸ்லாமியக் கவிதைகள் on ஜனவரி 18, 2008 by abdulqaiyumநீட்டிக்கிட்டு தொழுவனுமா ? நீட்டாமலே தொழுவனுமா ? ஆட்டிக்கிட்டு தொழுவனுமா ? ஆட்டாமலே தொழுவனுமா ? ஆட்டம் … .. முடிஞ்சு போகும் முன்னாலே முதலில் சொல்லுங்க முடியாதபோது பெரிய தொல்லைங்க. கேட்டாலும் கேட்டீக .. கேள்விகளை போட்டீக .. வீட்டையுமே ரெண்டாக்கி நாட்டையுமே ரெண்டாக்கி போட்டியாக எங்களையும் புறப்படத்தான் வச்சீக .. இறப்பு .. எப்ப வரும் ? எங்கே வரும் ? ஒண்ணும் தெரியலே ! எப்ப உங்க விவாதம் தீரும் ? எதுவும் புரியலே ! நமக்கு தொழுகை நடக்கும் முன்னே நாம தொழுவணும் நாயனுக்கு நன்றியினை நாளும் கூறணும் தொழுபவனே தொழ விடுங்க அதுவே போதும் அப்புறமா வச்சிக்குங்க உங்க விதண்டாவாதம். - அப்துல் கையூம்
முஸல்லா
Posted in இஸ்லாமியக் கவிதைகள் on ஜனவரி 18, 2008 by abdulqaiyumமுஸல்லாவே !
முழுமனதாய் நானுன்னை
மோகிக்கிறேன்.
யார் சொன்னது
நீ வெறும்
தொழுகை விரிப்பென்று?
நீ
சுவனத்திற்கு
சுருக்குவழி காட்டும்
ரத்தினக் கம்பளம் !
நன்மாராயம்
ஈட்டித்தரும்
அட்சயப் பாத்திரம் !
உன்னை விரிக்கையில்
சொர்க்கத்தின் தூரம்
சுருங்கி விடுகிறது !
பூக்கள் ..
இதழ்களை விரிக்கையில்
பூரிக்கிறது வண்டினம் !
கதிரவன் ..
காலைப்பொழுதில்
இளங்கீற்றை விரிக்கையில்
களிப்படைகிறது பறவையினம் !
உன்னை
தரையில் விரிக்கையில்
என் ஆன்மாவன்றோ
அடைகிறது ஆனந்தம் !
உன் பார்வை – அது
தீர்க்கமான பார்வை
திடமான பார்வை
திசைமாறா பார்வை
திகட்டாத பார்வை
அதன் ரகசியம்
எனக்குப் புரியும்.
கண்ணியமிக்க
கஃபாவை மட்டுமே
நீ நோக்குவதால்தானே ..?
நீ
என்னைச் சுமந்து
என் பாவச்சுமைகளை
இறக்கி வைக்கிறாய்
தங்கத்தின்
தரத்தை மாற்றும்
தட்டானைப் போல
நீ என்
உள்ளத்தை
உன்னதமாய்
உருமாற்றி விடுகிறாய் !
உன் தூண்டுதலினால்
நன்மைகளே எனக்கு
வருவாய் !
அன்றைய தினம்
நீயும் என்னுடன்
சாட்சி கூற
வருவாயாமே ..?
வருவாயா?
வருவாய்.
அப்துல் கையூம்